நாகர்கோவில், பிப். 10 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நாளை அதேநேரம் அரசு தலைமைச் செயலாளர் காணொளி காட்சி கூட்டம் நடைபெற உள்ளது. ஆகவே விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 18 ம்தேதி (புதன்கிழமை) காலை 10:30 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
மேற்படி கூட்டம் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து கலெக்டர் தலைமையில் நடைபெறும். கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 8. 1. 2026 நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும்.
மேலும் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரால் நேரில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யும் வசதி மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


