நாகர்கோவில், ஏப். 17 –
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 85 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் நாகர்கோவில் தொகுதியில் மட்டும் 20 வேட்பாளர்களும், கன்னியாகுமரி தொகுதியில் 14 வேட்பாளர்களும், விளவங்கோடு தொகுதியில் 14 வேட்பாளர்களும், குளச்சல் தொகுதியில் 13 வேட்பாளர்களும், கிள்ளியூர் தொகுதியில் 11 வேட்பாளர்களும், பத்மநாதபுரம் தொகுதியில் 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இதில் நாகர்கோவில் தொகுதியில் மட்டும் 20 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக நேற்று முதல் இயந்திரங்களில் பாதுகாப்பாக சின்னங்கள் பொருத்தம் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கிள்ளியூர் தொகுதி மற்றும் விளவங்கோடு தொகுதிக்கான சின்னம் பொருத்தம் பணிகள் நிறைவு பெற்று அவைகள் பத்திரமாக பாதுகாப்பாக அலுவலகங்களில் அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.
நாகர்கோவில் தொகுதிக்கான சின்னங்கள் பொருத்தும் பணி கலெக்டர் அலுவலக வளாகத்திலும், கன்னியாகுமரி தொகுதிக்கான பணிகள் பூதப்பாண்டி தாலுகா அலுவலகத்திலும், பத்மநாபபுரம் தொகுதிக்கான பணிகள் திருவட்டார் தாலுகா அலுவலகத்திலும், குளச்சல் தொகுதிக்கான பணிகள் அங்குள்ள தாலுகா அலுவலகத்திலும் இன்றும் நடைபெற்றன.
இந்த பணிகள் முடிவடைந்தபின் அனைத்தும் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்படும் எனவும், பின்னர் இந்த இயந்திரங்கள் வரும் 22ஆம் தேதி மதியத்துக்கு பின்பு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.



