தருமபுரி மே 15
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா சிட்டா பெயர் மாற்றம் புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட இதர உதவித்தொகைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 467 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வை உடனுக்குடன் வழங்கிட வேண்டும் என்று கூறினார். அப்போது பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பெண் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி பெறுவதற்கான ஆணைகளையும், படிப்பதற்கு தேவையான புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள் உடைகளையும் ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை ஆட்சியர் சுப்பிரமணி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



