நாகர்கோவில், ஜூன் 5 –
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் வருவாய் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பறக்கும் படை தனித் தாசில்தார் பாரதி தலைமையில் துணை வட்டாட்சியர் முத்துப்பாண்டி, ஓட்டுநர் ஏ.ஒய். ஜாண் பிரைட் குழுவினர் இன்று அதிகாலை அகஸ்தீஸ்வரம் வட்ட பகுதியில் பொது விநியோகத் திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது மணக்குடி என்ற இடத்தில் தமிழக பதிவெண் கொண்ட சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, டிரைவர் தப்பி ஓடினார்.
பின்னர் சொகுசு காரை சோதனை செய்ததில் அதில் சுமார் 1500 கிலோ பொது விநியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்திச் செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட அரிசியை காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் காரை
விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மணக்குடி பகுதியில் பழுதடைந்த கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொது விநியோகத் திட்ட அரிசி சுமார் 400 கிலோ கைப்பற்றப்பட்டது. மேற்படி கைப்பற்றப்பட்ட அரிசியும் காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.



