நாகர்கோவில், ஆக. 27:
நாகர்கோவில்–தோட்டியோடு நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள குதிரைபாஞ்சான் குளத்தில், நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இரணியல் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவர் களியக்காவிளை மீனச்சல் மேலதெற்றிவிளையை சேர்ந்த கிறிஸ்துராஜின் மகன் திலீப் டேனியல் (20) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 23-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பாததால் அவரது தந்தை களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், குதிரைபாஞ்சான் குளத்தில் திலீப் டேனியல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது அண்ணன் டேனியல் ராஜ் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



