கன்னியாகுமரி, மே 22 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் விசாக பெருந்திருவிழாவும், புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி திருவிழாவும் முக்கியமான திருவிழாக்கள் ஆகும். இந்த திருவிழாவில் 10 நாட்களும் பகவதி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு வைகாசி விசாக பெந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின்போது 1ம் திருவிழா அன்று இரவு பூப்பந்தல் வாகனத்திலும், 2ம் திருவிழா அன்று காலையில் பல்லக்கு வாகனத்திலும், இரவு கிளி வாகனத்திலும், 3ம் திருவிழா அன்று காலை மற்றும் இரவு வேலைகளில் அன்ன வாகனத்திலும், 4ம் திருவிழா அன்று காலை மற்றும் இரவு வெள்ளி காமதேனு வாகனத்திலும், 5ம் திருவிழா அன்று காலை மற்றும் இரவு நேரத்தில் சிம்ம வாகனத்திலும், 6ம் திருவிழா அன்று காலையில் யானை வாகனத்திலும், இரவு இந்திர வாகனத்திலும், 7ம் திருவிழா அன்று காலையில் பல்லக்கிலும், இரவு வெள்ளி இமயகிரி வாகனத்திலும், 8ம் திருவிழா அன்று இரவு பூப்பந்தல் வாகனத்திலும், நள்ளிரவு வெள்ளி குதிரை வாகனத்திலும், 9ம் திருவிழா அன்று இரவு வெள்ளிக் கலைமான் வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம்.
இதற்காக மொத்தம் 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் குதிரை, இமயகிரி, காமதேனு, கலைமான் ஆகிய 4 வாகனங்கள் வெள்ளி வாகனங்கள் ஆகும். மீதி உள்ள பூப்பந்தல், கிளி, அன்னம், யானை, சிங்கம், இந்திர வாகனம் ஆகிய 6 வாகனங்கள் மர சிற்ப வாகனம் ஆகும். இதில் சேதமடைந்து இருந்த 6 மர சிற்ப வாகனங்களும் வைகாசி விசாக திருவிழாவையொட்டி சீரமைக்கப்பட்டு, வர்ணங்கள் தீட்டும் பணி நடந்து வருகிறது.



