கிருஷ்ணகிரி, ஆக. 5 –
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 08.08.2026 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்களான. அசோக் . லேலண்ட், ஒலா எலக்ட்ரிக், டைட்டன் கம்பனி, டிவிஎஸ் மோட்டார் கம்பனி போன்ற 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ என அனைத்துவித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04343-291983 வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.



