ஈரோடு, ஆக.24.
ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவிலுக்குள் பாம்பு புகுந்ததால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவிலில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் பாம்பு ஒன்று நடமாடுவதை பூசாரி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், மாட்டுத் தொழுவத்திற்குள் பதுங்கியிருந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
பாம்பு பிடிபடாமல் தொடர்ந்து போக்கு காட்டியதால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்தது. இறுதியில் பாம்பை லாவகமாக பிடித்த யுவராஜ், அதனை பத்திரமாக மீட்டார்.
பின்னர் மீட்கப்பட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற கோவிலுக்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



