கன்னியாகுமரி, மே 6 –
கன்னியாகுமரி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தினேஷ் (33). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும் மலையடி பகுதியை சேர்ந்த சந்துரு (27) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவ தினம் தினேஷ் லட்சுமிபுரத்தில் உள்ள அவரது வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த சந்துரு கையில் வைத்திருந்த கட்டையால் தினேஷை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த தினேஷை அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் சந்துரு மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சந்துரு மீது கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


