கன்னியாகுமரி, மே 22 –
கன்னியாகுமரி நகராட்சி ஆணையாளர் பட்டுசாமி தலைமையில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர், சுகாதார ஆய்வாளர் அந்தோணி, சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ் ஆகியோர் கடற்கரை சாலை, ரதவீதி, கோவளம் ரோடு, சன்னதி தெரு போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடைகளில் மொத்தம் 7 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு மொத்தமாக ரூ.4 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோன்று தொடர்ந்து கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், அந்த கடைகள் சீல் வைக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் கடை உரிமையாளர்களை எச்சரித்துள்ளார்.


