நாகர்கோவில், செப்.8-
நாகர்கோவிலில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்கும் கட்டணமில்லா மருத்துவ வசதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், மருத்துவமனைகளின் வகைப்பாடு மற்றும் சிகிச்சைக்கான செலவு விகிதங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும், காப்பீட்டுத் தொகைக்கு உட்பட்டு மருத்துவச் செலவுகளுக்கான கட்டணமில்லா சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், திட்டத்தில் சேர விருப்பமில்லாத ஓய்வூதியர்களுக்கு அதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஐவில், பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு ஓய்வுபெற்றோர் நல அமைப்புகளின் நிர்வாகிகள் ராமச்சந்திரன், பாலச்சந்தர், பிரான்சிஸ், சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.



