சென்னை, ஜூன் 24 –
எழுத்தாளரும் வழக்கறிஞருமான கார்த்திகேயா வாஜ்பாய், தனது புதிய நூலான தி அன் பிகம்மிங்‘ நூலை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹிக்கின் போதம்ஸ் புத்தக நிலையத்தில் வெளியிட்டார்.
நூல் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளரும் தலைமைத்துவ ஆலோசகருமான ஸ்ரீபிரகாஷ் நடாதூர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு, வாழ்க்கை நோக்கம், அடையாளம் மற்றும் தனிமனித வளர்ச்சி குறித்து கார்த்திகேயா வாஜ்பாயுடன் உரையாடினார். ஆன்மிகப் பயிற்சிகள் குறித்து பேசுகையில், தியானம் என்பது எண்ணங்களை முற்றிலும் நீக்குவது அல்ல; மாறாக விழிப்புணர்வை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சி என வாஜ்பாய் விளக்கினார்.
இதுகுறித்து ஸ்ரீபிரகாஷ் கூறுகையில், “இந்த நூல் வெற்றி மற்றும் அடையாளம் குறித்த நம்முடைய ஆழமான நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய அழைக்கிறது. உடனடி பலன் தெரியாவிட்டாலும், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆன்மிகப் பயிற்சியே உண்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது,” என்றார்.
நூல் வெளியீட்டு விழாவில் கார்த்திகேயா வாஜ்பாய் பேசுகையில், “வெளிப்புற உலகம் நிர்ணயிக்கும் இலக்குகளைத் தொடர்ந்து துரத்துவதற்குப் பதிலாக, உள்ளார்ந்த சிந்தனையின் மூலம் வாழ்க்கை தனது நோக்கத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம். ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள இந்நூல் தமிழ் உள்பட இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு, அவர் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ராமாபுரம் வளாக மாணவர்களுடன் கலந்துரையாடினார். அங்கு ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகங்களின் தலைவர் டாக்டர் ஆர். சிவகுமாரை சந்தித்து, தனது நூலின் பிரதியை வழங்கினார்.



