எட்டயபுரம், ஜூலை 31 –
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அருள்மிகு தேவிஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.
மேலும் மகாகவி பாரதியார் வணங்கிய இந்த சிறப்பு வாய்ந்த திருக்கோவிலில் அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பிரசித்தி பெற்ற அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், குங்குமம், திருநீறு, தயிர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த திருக்கோவிலில் வைத்து தான் கானி நிலம் வேண்டும் பராசக்தி கானி நிலம் வேண்டும் என்ற பாடலை மகாகவி பாரதியார் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.



