போகலூர், அக். 7 –
ஊதிய உயர்வு உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் 4,500 க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் 15,000 க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில் 45,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விவசாய பருவம் துவங்கி உள்ளதால் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 132 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட நியாய விலைக்கடை பணியாளர்கள் போராட்டத்தால் பாதிக்கப்படுவர். இதனால் பணியாளர்கள் நீண்ட நாள் கோரிக்கைகளான புதிய ஊதிய ஒப்பந்தம் 2023 மார்ச் 31 ல் நிறைவடைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் பல்வேறு நிபந்தனைகளை விதித்து தாமதப்படுத்தி வருவதை தவிர்த்து அனைத்து சங்கப் பணியாளர்களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும்.
ஊதியக் குழு பரிந்துரை படி வீட்டு வாடகைப்படி அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் வழங்கியதை குறைத்ததை ரத்து செய்ய வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு மாவட்ட, மாநில கூட்டுறவு வங்கிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும். நியாய விலைக் கடை விற்பனையாளர்களுக்கு சங்கப் பணியாளர்களைப் போல் 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அங்காடிகளில் புளூ டூத் முறை உள்ளது போல், அங்காடிகளுக்கு உள் வரும் பொருட்கள் விநியோகத்திலும் புளூ டூத் முறை அமல்படுத்த வேண்டும்.
தேவையில்லாத கட்டுப்பாடற்ற பொருட்கள் விநியோகத்தை தவிர்க்க வேண்டும். சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.1000 ஐ ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பிப். 2021க்கு பிறகு ஒய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம், நிதிப் பலன்கள் வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கணினி இயக்குவோர், நகை மதிப்பீட்டாளர்களை சங்கத்தில் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும். பெண் பணியாளர்களின் நலன் கருதி அனைத்து சங்கங்களிலும் கழிவறை வசதி உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குஞ்சர பாண்டியன், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுரவத் தலைவர் முத்துராமலிங்கம், கவுரவ செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத்தலைவர்கள் கோவிந்தன், முருகேசன், மாவட்ட இணைச்செயலாளர்கள் சந்திரசேகர், பாலமுருகன், போராட்டக் குழு தலைவர் சசிகுமார், போராட்ட குழு செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



