ஈரோடு, நவ. 10 –
தமிழ்நாடு தொடக்க கைத்தறி நெசவாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு காளை மாடு சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தலைவர் தங்க வேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இது பற்றி கூட்டமைப்பு தலைவர் தங்க வேல் கூறியதாவது: விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் நூற்பாலைகளில் இருந்து வழங்கிய நூல்கள் மூலம் வேட்டி உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கிய 13 லட்சம் வேட்டிகள் தர பரிசோதனையில் பாலிஸ்டர் காட்டன் வார்ப்பு நூலில் வித்தியாசம் உள்ளதாக கொள்முதல் செய்யாமல் இருப்பில் கிடங்கில் உள்ளது. தர பரிசோதனை என்பது 25 ஆயிரம் வேட்டிக்கு ஒரு வேட்டி மட்டும் தர ஆய்வு செய்யப்பட்டது இதன் பிறகு கூட்டமைப்பு சார்பாக இயக்குனரை நேரில் சந்தித்து 5000 வேட்டிக்கு ஒன்று தர பரிசோதனை செய்ய மனு கொடுக்கப்பட்டது.
எங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இயக்குனர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். ஆனால் இதுவரை அதிகாரிகள் அதை நடைமுறைப்படுத்தவில்லை. உற்பத்தி செய்து அனுப்பிய வேட்டிகளுக்கான நெசவு கூலி உட்பட இருந்து 20 கோடி ரூபாய் சங்கங்களுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சங்கங்கள் உறுப்பினர்களுக்கு நெசவுகூலி தர இயலவில்லை. இதனால் சங்கங்கள் மிகுந்த நிதி பற்றாக்குறையால் தொடர்ந்து செயல்பட இல்லாத சூழ்நிலையில் உள்ளது.
எனவே துறை இயக்குனரின் உத்தரவை உடனடியாக அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் நெசவு கூலி 20 கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். நிராகரிக்கப்பட்ட 13 லட்சம் வேட்டிகளை கொள்முதல் செய்ய ஆவண செய்ய வேண்டும். 15000 கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.



