நாகர்கோவில், ஜூலை 7 –
கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலைகளின் சீற்றம் மற்றும் கடல் நீரோட்டத்தின் வேகம் அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் மற்றும் கடல் சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிகமாக உயரத்தில் எழகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூலை 8ம் தேதி இரவு 11:30 மணி வரை சுமார் 2.7 மீட்டர் உயரம் முதல் 2.9 மீட்டர் வரை உயரமான ராட்சத அலைகள் வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கடலோர பகுதிகளில் கடல் நீரோட்டத்தின் வேகமும் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 8ம் தேதி இரவு 7 மணி வரை கடல் நீரோட்டத்தின் வேகம் வினாடிக்கு 0.7 முதல் 0.9 மீட்டர் வரை இருக்கக்கூடும். தற்போது இந்த எச்சரிக்கை கண்காணிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கை ஏதும் தேவையில்லை என்றாலும், கடலோரப் பகுதி மக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் குறித்த அடுத்தடுத்த தகவல்களை தொடர்ந்து கவனிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மக்கள் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கடலுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. என்று இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


