இளையான்குடி, பிப். 05 –
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா நகரகுடி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி தெய்வானை (45) என்பவரின் தலைமையில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்து பேசினார்கள்.
அந்த மனுவில் கூறியிருந்ததாவது: நகரகுடி கிராமத்தில் தெய்வானை, அழகன், கார்த்திகைராஜன் மற்றும் கருப்பணன் ஆகிய குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். வீட்டின் இடத்திற்கு பட்டா வீட்டு வரிரசீது மற்றும் மின் கட்டண ரசீது ஆகியன உள்ளது.
இருப்பினும் எதிர்மனுதாரர் நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக உள்ளது எனக் கூறி கடந்த வாரம் கார்த்திகேயன் என்பவரின் வீட்டை வருவாய்த்துறையினர் இடித்துவிட்டனர். அடுத்து மற்ற மூன்று வீட்டையும் இடிப்போம் என அதிகாரிகள் கூறி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக எங்கள் தரப்பு மேல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது.
எனவே மனு விசாரணையின் முடிவு வரும் வரை வருவாய்த்துறையினர் எங்களின் வீடுகளை இடிக்கக் கூடாது. இதை தாங்கள். மண்ணின் நீதியாக எடுத்துக்கொண்டு உரிய விசாரணை செய்து போதிய கால அவகாசம் கொடுத்து தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.



