ஈரோடு, செப்.05.
ஈரோடு இதயம் நற்பணி இயக்கம், ஈரோடு அரசன் கண் வங்கி மற்றும் அரசன் கண் மருத்துவமனை சார்பில் 41-வது தேசிய கண் தான இருவார விழா ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள அரசன் ரெசிடென்சி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு அரசன் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதயம் நற்பணி இயக்கத் தலைவர் எஸ்.வி. மகாதேவன் வரவேற்றார்.
விழாவில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சண்முகன் கலந்து கொண்டு கண்தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை கௌரவித்து, பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினார். மேலும், கண் அறுவை சிகிச்சை செய்த பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளையும் வழங்கி பேசினார்.
மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். கண்தான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை டாக்டர்கள் சுகுமார் மற்றும் மாதவன் வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் இதயம் நற்பணி இயக்க நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசன் கண் மருத்துவமனை முகாம் மேலாளர் புவனேஸ்வரன் நன்றி கூறினார்.



