நாகர்கோவில், மே 7 –
மதுரை – நாகர்கோவில் வழியாக புனலூர் செல்லும் பயணிகள் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வேளாங்கண்ணிக்கு பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பயணிகளுக்கு நேரடி ரயில் வசதி இல்லாததால் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலையாவது நாகர்கோவில் – திருநெல்வேலி வழியாக இயக்கியிருக்கலாம் என்று பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மதுரையிலிருந்து நாகர்கோவில் வழியாக புனலூர் செல்லும் இந்த ரயில், 410 கி.மீ. தூரம் மட்டுமே பயணிக்கிறது. எக்ஸ்பிரஸ் ரயிலாக மாறியதால் கட்டணம் உயர்ந்து பயணிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே, இந்த ரயிலின் வேகத்தை அதிகரித்து திருச்சி வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நீட்டிக்கப்பட்டால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் பயனடைவர். இதனால் ரயில்வேக்கு கூடுதல் வருவாயும் கிடைக்கும். தற்போது இரணியல் முதல் தஞ்சாவூர் வரையிலான பகுதிகளில் இருவழிபாதை பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. இதனால் கிராசிங் தேவை இல்லாமல் ரயிலை வேகமாக இயக்க முடியும்.
திருவனந்தபுரம், கொல்லம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ சமூகத்தினர் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு அதிக அளவில் செல்கின்றனர். அதேபோல், முஸ்லிம் பக்தர்கள் நாகூர், முத்துப்பேட்டை, காரைக்கால் தர்காக்களுக்கும், இந்து பக்தர்கள் திருநள்ளாறு சனி பகவான் ஆலயம் உள்ளிட்ட நவகிரகத் தலங்களுக்கும் செல்ல நேரடி ரயில் வசதி இல்லாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் குமரி, நெல்லை மாவட்டங்களிலிருந்து திருச்சி செல்லும் தற்போதைய ரயில்கள் பெரும்பாலும் நள்ளிரவு நேரத்தில் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இருவழிபாதை பணிகள் நிறைவடைந்துள்ளதால், மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி அல்லது காரைக்கால் வரை நீட்டித்து, திருச்சிக்கு வசதியான நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


