இரணியல், ஜூன் 17 –
குளச்சல் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. திங்கள் நகர் பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படும் அந்த பஸ்சை சேர்மங்கலம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (45) என்பவர் ஓட்டினார்.
பஸ் காலை 7 மணியளவில் தோட்டிகோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணிகளை இறக்கி ஏற்றி கொண்டு புறப்பட்டு சென்றது. அப்போது பெண் ஒருவரும் அந்த பஸ்சில் ஏறினார். சற்று நேரத்தில் வளைவான திருப்பத்தில் பஸ் திரும்பிய போது முன் பக்கம் வாசல் வழியாக அந்த பெண் வெளியே விழுந்தார். இதில் தலையில் காயமடைந்த அவரை குமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பெண் வடசேரியை சேர்ந்த சகுந்தலா (72) என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர் தோட்டியோடு பகுதிக்கு வந்து விட்டு, வீட்டுக்கு திரும்பி செல்லும் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
விபத்து ஏற்பட காரணமான அரசு பஸ்ஸில் தானியங்கி கதவுகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் அந்த பெண் ஓடும் பஸ்ஸிலிருந்து வெளியே விழுந்து பரிதாபமாக பலியாகி விட்டார் என பொதுமக்கள் தெரிவித்தனர். அது மட்டுமின்றி காலை நேரத்தில் அந்த தடத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால், பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருப்பதாகவும், பேருந்து எண்ணிக்கைகள் குறைவாகவே இயக்குவதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த மாதிரி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்றும், போக்குவரத்து நிர்வாகம் அதிக அளவில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


