சென்னை, ஜூலை 16 –
இந்திய கடல்சார் பல்கலைக்கழக புத்தாக்க தொழில் முனைவு ஆராய்ச்சி மையத்தை சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தலைமையகத்தில் அதன் துணைவேந்தர் டாக்டர் மாலினி வி. சங்கர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கடல்சார் புத்தாக்க மையம் மாணவர்கள், கடல்சார் துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வளரும் தொழில்முனைவோர் மத்தியில் கடல்சார் கண்டுபிடிப்பு, தொழில் முனைவு மற்றும் நிறுவன மேம்பாட்டை வளர்ப்பதற்கான ஒரு பிரத்யேக தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதும், தொழில்துறை சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை ஊக்குவிப்பதும், மாலுமிகள், துறைமுக வல்லுநர்கள், தொழில்துறை பங்குதாரர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.
மேலும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் நடத்தப்பட்ட ஹேக்கத்தான் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து புத்தாக்க தொழில் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் இணைத் துணைவேந்தர் டாக்டர் ஸ்ரீ ராஜூ பாலாஜி வழங்கினார். துணைவேந்தர் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்ப நிதியுதவியாக ரூ. 60 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ. 5 கோடி ஆகும்.
தொடக்க விழாவில் மெரிடைம் இந்தியா பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன், இந்திய கடல்சார் பல்கலைக்கழக இணைத் துணைவேந்தர் டாக்டர் ஸ்ரீ ராஜூ பாலாஜி,
பல்கலைக்கழக புத்தாக்க தொழில்முனைவு ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் ஒய்.வி.வி.எஸ்.என் .மூர்த்தி, மற்றும் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் டாக்டர் முரளி ஆகியோருடன் கல்வித்துறை மற்றும் கடல்சார் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடக்கவிழாவில் உரையாற்றிய இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மாலினி வி. சங்கர் கூறியதாவது: இப்பல்கலைக்கழக புத்தாக்க தொழில்முனைவு ஆராய்ச்சி மையம் அமைப்பது போன்ற முயற்சிகள், உலகளாவிய கடல்சார் தலைமையாக உருவெடுக்கும் இந்தியாவின் தொலைநோக்கு இலக்குகளுக்கு பெரும் பங்காற்றும் அதே வேளையில், கடல்சார் தொழில்துறைக்கான தீர்வுகளை உருவாக்க இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு அதிகாரமளிக்கும் என்றார்.
மேலும் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் தூண்டப்பட்டு, ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாம்பே மற்றும் சென்னை துறைமுகம் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களின் ஆதரவுடன் ஓராண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாக இந்தப் புதிய கடல்சார் புத்தாக்க தொழில் முனைவு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது என்று துணைவேந்தர் தெரிவித்தார்.



