தருமபுரி, மே 21 –
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கீரைப்பட்டி அடுத்த கெளாப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சந்தோஷ் குமார் (23). பட்டதாரியான இவர் தனது தந்தை செய்து வரும் தொழிலுக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி அவர் கோவையிலிருந்து தருமபுரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சந்தோஷ் குமார் மூளைச்சாவு அடைந்தார்.
இதைத் தொடர்ந்து வாலிபரின் குடும்பத்தினர் சம்மதத்துடன் உடல் உறுப்புக்கள் தானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து சந்தோஷ் குமாரின் இதயம், சிறு குடலும் உரிய பாதுகாப்பு சாதனங்களில் வைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மின்னல் வேகத்தில் சேலம் விமான நிலையத்திற்கு 3 மணிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு விரைந்த இதயம் ரீலா மருத்துவமனைக்கும், சிறுகுடல் எம் ஜி எம் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டன.
தனது உயிரை விட்டு மேலும் இரண்டு பேருக்கு மறுவாழ்வு கொடுத்து விட்டு சென்றுள்ளதாக வாலிபர் சந்தோஷ் குமாரின் உறவினர்கள் சோகம் கலந்த நெகிழ்ச்சியுடன் கூறினர். மரணத்திலும் மனித நேயத்துடன் சந்தோஷ் குமார் குடும்பத்தினர் செயல்பட்டு உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதே தொடர்ந்து சேலம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சந்தோஷ் குமார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


