கன்னியாகுமரி, ஜூலை 15 –
கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு 8 மணிக்கு கோவிலில் பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது. இன்று காலை கோவிலை திறக்கும் போது உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவில் பூஜாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். கோவில் நிர்வாகிகள் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கோவில் பின்பக்கம் வழியாக கோவிலினுள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து விட்டு, சிசிடிவி மற்றும் ஹார்டுடிஸ்க்கையும் எடுத்து விட்டு சென்றது தெரியவந்தது. மேலும் ராமர் கோவிலில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அருகிலுள்ள அய்யா வைகுண்டர் நிழல் தாங்கல் பூட்டை உடைத்துள்ளனர். ஆனால் அங்கு பெரிய விலையுள்ள பொருட்கள் இல்லாததால் அங்கிருந்து வெளியே வந்துள்ளனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள பேக்கரி பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அங்கும் பணம் ஏதும் இல்லாததால் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி ஹார்டுடிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என தெரியவில்லை. இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



