ஈரோடு, ஜூலை 31 –
ஈரோட்டை சேர்ந்தவர் கவுதமன். இவரது மகள் மானசி. வளரிளம் பருவத்தினரின் மனநல விழிப்புணர்வுக்காகக் குரல் கொடுக்கும் மாணவி மானசி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலம் டாலஸ் நகரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். 15 வயதே ஆன இவர்
இன்றைய உலகில் வளரிளம் பருவத்தினரின் மனநலம், தன்னம்பிக்கை, உணர்வும் அறிவும் இரண்டறக்கலந்த வளர்ச்சி ஆகியன முக்கியமான பிரச்சனைகளாக உருவெடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து ஓர் இளம் பெண் தன் எழுத்தின் மூலம் இந்திய அளவிலும் உலக அளவிலும் கவனம் பெற்றுள்ளார்.
மாணவி மானசி தன் முதல் நூலான Mind Mahatva The Teen Mind Matters மனநலம் குறித்த விழிப்புணர்வை ஊட்டி தேசிய மற்றும் உலக அளவில் கவனத்தை ஈர்த்ததுடன் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். வளரிளம் பருவத்தினரின் மனநிலை, தன்னம்பிக்கை, அடையாளத் தேடல், நட்பு, சமூக ஊடகங்களின் தாக்கம், கல்விச்சுமை, தனிமை, மனஅழுத்தம், உணர்வும் அறிவும் இரண்டறக்கலக்கும் சிக்கல், விழுமியங்களின் அழுத்தம், முரண்பாடுகள், சவால்கள் இவற்றை வளரிளம் பெண்ணின் பார்வையில் இயல்பாகவும் எளிமையாகவும் இந்நூல் விளக்குகிறது.
இதுவரை இளையோருக்காக பெரியவர்கள் எழுதியதே வரலாறாக இருந்துள்ளது. ஆனால் இந்நூல் ஓர் இளம்பெண்ணால் இளம் தலைமுறையினரின் உணர்வுகளைப் புரிந்து எழுதப்பட்டிருக்கிறது. இதுவே Mind Mahatva – The Teen Mind Matters -என்ற நூலின் தனிச்சிறப்பாகும். இளம் தலைமுறையினருக்கிடையே மனம் திறந்த உரையாடல்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
ஆங்கிலத்தில் வெளியாகி இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அமேசான் தளத்தில் பல்வேறு பிரிவுகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் இதன் பன்னாட்டு வரவேற்பைத் தொடர்ந்து உலகின் முன்னணிப் பதிப்பகங்கள் பல இந்நூலின் வெளியீட்டு உரிமையைப் பெற ஆர்வம் தெரிவித்துள்ளன.
இந்நூல் ஆசிரியர் சாதனையை ஏற்கும் வகையில் India Book of Records, Asia Book of Records ஆகிய இரு நிறுவனங்களும் இவரை இந்தியாவின் இளம் வயது எழுத்தாளர் என்று சிறப்பித்துள்ளன. அமெரிக்காவில் கல்வி பயின்றாலும் இந்திய விழுமியங்களையும் தமிழ்ப் பண்பாட்டையும் தன் அடையாளங்களாகக் கொண்டு உலகளவில் நடத்திவரும் தனது எழுத்துப்பயணத்தில் உலகெங்குமுள்ள கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் வாசகர்களிடமிருந்து இவர் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
மாணவி மானசி தனது பெற்றோருடன் தமிழ்நாடு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை மரியாதை நிமித்தமாக சந்தித்து, அவரது வாழ்த்துக்களைப் பெற்றார். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் மாணவி மானசியை பாராட்டு புத்தகத்தில் பல தன்னம்பிக்கை பற்றி ஏராளமான தகவல்கள் உள்ளதாகவும் இது போல் ஊக்குவிக்கும் பல புத்தகங்களை எழுதி சாதனை படைக்குமாறும் எதிர்காலத்திலும் இது போன்ற சமூகப் பங்களிப்புகளைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



