நாகர்கோவில், செப்டம்பர் 27 –
நாகர்கோவில் வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்க புதிய இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் இயக்கத்தை மேயர் மகேஷ் நேற்று காலை தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 52 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியின் மக்கள் தொகை பெருக்கத்தால் சாலையில் வரும் குப்பையின் அளவு பெருகி வந்தது. தினமும் சுமார் 130 டன் மாநகர பகுதியில் குப்பைகள் குவிந்தன. இந்த குப்பைகள் கோட்டாறு வலம்புரி விளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்தது. ஒரு லட்சத்து 53 ஆயிரம் கியூபிக் மீட்டர் குப்பைகள் தேங்கின. அடிக்கடி தீ விபத்துகளும் நிகழ்ந்தன. குப்பைகளை குறைக்கும் வகையில் நகரில் 11 இடங்களில் நுண் உரம் செயலாக்க மையம் அமைக்கப்பட்டது.
வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் இந்த நுண் உரம் செயலாக்க மையத்தில் உரமாக்கப் படுகிறது. மக்காத குப்பைகள் மட்டும் வலம்புரி விளைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் வலம்புரி விளையில் பயோ மைனிங் முறையில் அனைத்து குப்பைகளையும் தரம் பிரித்து அகற்றி அந்த இடத்தில் குப்பை இல்லாத தனி மைதானமாக மாற்றும் வகையில் கடந்த 2020ல் பணிகள் தொடங்கியது.
இந்நிலையில் தற்போது ரூ.85 லட்சம் செலவில் குப்பைகளை வேகமாக தரம் பிரித்து வழங்குவதற்கான இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர இயக்கத்தை மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று காலை தொடங்கி வைத்தார். ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, சுகாதார அலுவலர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த இயந்திரம் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வெளியேற்றும். மக்கும் குப்பைகள் பொடியாக வந்துவிடும். பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை தானாக வெளியே தள்ளிவிடும். பின்னர் இவை பொடியாக்கப்படும். வலம்புரிவிளை உரக்கிடங்கில் மொத்தம் 6 இடங்களில் இயந்திரம் அமைக்கப்பட உள்ளது என மேயர் மகேஷ் கூறினார்.


