நாகர்கோவில், மே 18 –
நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ளவர்களின் முக்கிய பொழுதுபோக்கு பூங்காவாக காணப்படுவது நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான வேப்பமூடு பகுதியில் உள்ள சர்.சி.பி ராமசாமி நினைவு பூங்கா ஆகும். இந்தப் பூங்காவில் உள்ள பல்வேறு உபகரணங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளதாகவும், கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஏற்படுத்தப்பட்ட நீரூற்றுப் போன்றவைகள் செயல்படாமல் உள்ளதாகவும் பல்வேறு புகார்கள் மேயர் பார்வைக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. எனவே இன்று காலை நாகர்கோவில் மாநகராட்சி (பொ) மேயர் மேரி பிரின்சி லதா மாநகராட்சி பூங்காவிற்கு திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது பூங்காா அருகிலுள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மிக அருகில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கேளிக்கை ராட்டு பாதுகாப்பற்ற முறையில் போடப்பட்டிருப்பதை கண்ட அவர் உடனடியாக அதனை மாற்றி வேறு இடத்தில் நிறுவ உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பூங்காவின் மின் விளக்குகளையும், சிசிடிவி கேமராக்களையும் பழுது ஏற்படாமல் பாதுகாக்க வலியுறுத்தினார்.
தொடர்ந்து பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட அவர் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீர் ஊற்று சிகரம் செயல்படாமலும், சுகாதாரமற்ற முறையில் இருப்பதை கண்ட அவர் உடனடியாக பௌண்டைன் நீரினை மாற்றி, அதனை சுத்தம் செய்து மீண்டும் திறம்பட அந்த பௌண்டைனை செயல்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர் மாநகரப் பூங்காவிற்கு உட்பட்ட உரம் தயாரிக்கும் கிடங்கினை ஆய்வு செய்தார்.
அப்போது தூய்மை பணியாளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட காலை உணவை உண்டு பார்த்து காலை உணவு தயாரிப்பவரிடம் இன்னும் தரமான உணவு வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து பூங்காவில் உள்ள டிஜிட்டல் கோலரங்கத்தை பார்வையிட்ட அவர் அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தது மட்டுமல்லாமல் உள்ளே அமர்ந்து கோலரங்கத்தில் காண்பிக்கப்படும் காட்சிகளை பார்வையிட்டார். மேலும் பூங்காவை சுத்தமானதாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.
நடைபெற்ற ஆய்வின்போது மாநகர பொறியாளர் ரகுராம், சுகாதார அலுவலர் ஸ்டான்லி குமார், சுகாதார மேற்பார்வையாளர் விக்னேஷ், நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் வழக்கறிஞர். ஆனந்த், மாமன்ற உறுப்பினர்கள் மேரி ஜெனட் விஜிலா, விஜிலா ஜஸ்டஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.



