நாகர்கோவில், ஏப். 9 –
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர் காந்தி 2-ம் முறையாக போட்டியிடுகிறார். இன்று நாகர்கோவில் பகுதியில் மேளம் அடித்து வீதி வீதியாக நடந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு எம்.ஆர்.காந்திக்கு ஆதரவாக திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவை கால் ஊன்ற விடமாட்டோம் என்று திமுக சொல்லி வருகிறது. ஆனால் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் அடல் பிகாரி வாஜ்பாயுடன் திமுக கூட்டணி வைத்து, ஆட்சியில் பங்கேற்ற அந்த காலத்தில் இருந்தே தமிழகத்தில் பாஜக வேரூன்றி விட்டது என்பதை அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு பாரதிய ஜனதா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதற்கு முன்பாகவும் திமுக கூட்டணியில் சட்டமன்றத்தில் பாஜக இடம்பெற்றுள்ளோம். தமிழகத்தில் தற்போது பாஜக மிக வலுவாக வளர்ந்துள்ளது. நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தினுடைய அரசியலை நிர்ணயிக்கின்ற மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது.
தற்போதைய புதிய அரசியல் கட்சிகளின் வருகையால் தமிழகத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது தன் கருத்து என பாஜக மூத்த தலைவரும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான எம்.ஆர்.காந்தி தனது பேட்டியில் கூறினார்.
மேலும் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் புத்தேரி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் எம்.ஆர்.காந்தி ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்: வாழும் காந்தியாக இருப்பவர் எம்.ஆர்.காந்தி. அவர் மீண்டும் சென்னை ஜார்ஜ் கோட்டையை நாகர்கோவில் சட்டமன்றம் சார்பாக அலங்கரிக்க இருக்கிறார். சிறுபான்மை சமூகத்தின் சார்பாக தான் அவருக்காக ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன் என்று பேசி வாக்கு சேகரித்தார்.



