மார்த்தாண்டம், மார்ச் 3 –
மார்த்தாண்டம் கோதேஸ்வரம் கோயில் அருகே பழமை வாய்ந்த குளம் உள்ளது. இது ஒரு ஏக்கர் 35 சென்ட் இடத்தில் பரந்து விரிந்து காணப்பட்டது. பழைய காலங்களில் கோதேஸ்வரம் கோயில் பூஜை தேவைக்கு இங்கு தண்ணீர் எடுக்கப்பட்டது. ஆனால் மார்த்தாண்டத்தில் உள்ள வடிகால் கழிவுநீர் குளத்தில் பாய்ந்து மாசுபட்டது. மேலும் குளம் ஆக்கிரமிப்பில் காணப்பட்டது.
பழமை வாய்ந்த இந்த குளத்தின் ஓரத்தில் 7 குடும்பத்தினர் நீண்ட காலமாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் மின் கட்டணம் செலுத்தி, கரம் கட்டி வாழ்ந்து வந்தனர். ஆனால் பட்டா கிடையாது. இந்தக் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக வழக்கு மதுரை ஹைகோர்ட்டிலும் நடந்தது. நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் விதத்தில் இந்த குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் காலம் கடந்த பிறகும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்ற நிலைமைக்கு கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் இந்த குளத்தின் கரையில் உள்ள 7 வீடுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த குளத்தின் ஒரு புறத்தில் ரோடு உள்ளது. ரோடு ஓரத்தில் தனியார் தோட்ட உரிமையாளர் இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டி இருந்தார். இந்த தோட்ட சுற்றுச்சுவரை அகற்றவும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் குளத்தின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள 7 குடும்பத்தினருக்கு விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் நேற்று மாற்று இடத்தில் பட்டாவை விளவங்கோடு தாசில்தார் வயோலாபாய் வழங்கினார். நட்டாலம் கிராமம் முள்ளாஞ்சேரி பகுதியில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு சென்ட் வீதம் இடம் ஒதுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை நீர்வளத்துறை உதவி இன்ஜினியர் ஜஸ்டின் தலைமையில் பொதுப்பணித்துறை ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் இன்று வருகை தந்தனர். இவர்கள் முதலாவதாக ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்பில் உள்ள தனியார் தோட்டத்தின் காம்பவுண்டு சுவரை இடித்து மாற்றினார்.
இதனைத் தொடர்ந்து 7 வீடுகளை இடிக்க வந்தனர் அப்பொழுது தேமுதிக குழித்துறை நகர செயலாளர் ஜெயசிங் தலைமையில் சமூக சேவகர் ராமபத்திரன், நல்லூர் பஞ். உறுப்பினர் ரகு, வக்கீல் ரமேஷ் மற்றும் பலர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நட்டாலம் பஞ். பட்டா வழங்கப்பட்டாலும் முறையாக அளந்து தரவில்லை. எனவே வீடு மாறி செல்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என எடுத்துக் கூறினார். அதிகாரிகள் தரப்பில் மதுரை ஹைகோர்ட் நாளை வாய்தா உள்ளது.
கோர்ட் உத்தரவை அவமதித்ததாக மாஜிஸ்ட்ரேட் எங்கள் மீது கூறுவார் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு எழுத்துப்பூர்வமாக கொடுத்தனர். இந்த கடிதத்தை கோர்ட்டில் கொடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் வீடுகள் அகற்றுவதை ஒரு மாதம் தள்ளி வைத்து சென்றனர்.



