ஈரோடு, ஜூன் 8 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் இதில் கடந்த 2025-26 கல்வி ஆண்டில் முதலமைச்சர் தனித் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 28 மாணவியர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆட்சியர் கந்தசாமி மாணவ மாணவியர்கள் கல்வியறிவோடு சமூகம் மற்றும் பொது அறிவும் பெற்று மேம்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர் பேசும் போது: மாணவர்கள் சமூக மேம்பாட்டுக்காக தாங்கள் பயிலும் பள்ளி படிப்பினை ஊன்றுகோலாக வைத்து மேலும் முன்னேற பாட புத்தகம் தாண்டி அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு சமூக உணர்வை ஏற்படுத்தும் நாளிதழ்கள் செய்தித்தாள்கள் போன்றவற்றை படிப்பதில் அக்கறை செலுத்த வேண்டும். மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் கற்பதற்கு ஏராளமான பாடப்பிரிவுகள் உள்ளது. எனவே தங்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி படிப்போடு அல்லாமல் போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகும் வகையில் பயிற்சி பெற வேண்டும். தனி மனிதனை சமூகத்தில் உயர்த்துவது கல்வியால் மட்டுமே இயலும். அத்தகைய கல்வியை மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கற்க வேண்டும். மேலும் தொடர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அவர் தனது அரசுப்பணியில் சேர்ந்த பிறகு சந்தித்த நிகழ்வுகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன், மாணவ, மாணவியர்களின் பள்ளியில் ஏற்பட்ட சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்தார். மாணவ மாணவியருக்கு உயர்கல்வி, கல்வியின் முக்கியத்துவம். புத்தகங்கள் படித்தல் உள்ளிட்ட பல்வேறு தவைப்புகளில் அறிவுரை வழங்கி கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் தனித் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 28 பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமான்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



