தேனி, ஜூன் 22 –
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (22.06.2026) போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், விழிப்புணர்வு ஓட்டம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடி தெரிவித்ததாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 26.06.2026 அன்று Start Run, Stop Drug – Anti Drug Run 2026’ விழிப்புணர்வு ஓட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இவ்விழிப்புணர்வு ஓட்டம் நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ள இருப்பதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்புவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் காவல்துறை, நகராட்சித்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்டத் துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் கதிர்வேல், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) கவிதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



