மதுரை, ஜூன் 26 –
மதுரை விராட்டிபத்து அருகே முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த நிலையில் 2005 ஆம் ஆண்டு முதல் அறநிலைத்துறை இக்கோயிலை கைப்பற்றிய நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை தொடர்ந்து அறநிலையத்துறை சார்பில் தற்பொழுது காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விராட்டிபத்து முத்தாலம்மன் கோயில் மந்தையில் கூடினர்.
முத்தாலம்மன் கோவில் பூட்டை உடைத்து கோவிலை கிராம மக்களிடமிருந்து அறநிலையத்துறை கைப்பற்றியது.
இதனால் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் விராட்டிபத்து கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட சூழ்நிலையில் மாநகர காவல் உதவி ஆணையர் தலைமையில் வந்த போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் விராட்டிபத்து பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக அறநிலையத்துறையினர் போலீசார் முன்னிலையில் பூட்டை உடைத்து கோயிலுக்குள் சென்ற சம்பவம் விராட்டிபத்து கிராம மக்களுக்கு தெரியவந்ததை அடுத்து கிராம மக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கூடி கிராம கோவில் கிராம மக்களுக்கே சொந்தம் என்று கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.