கன்னியாகுமரி, ஜூன் 25 –
தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என தடைவிதிக்கும் நாட்களைக் கணக்கிட்டு அந்த நாட்களில் நிவாரணம் வழங்கவேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கும் அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று அடிப்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அரசு அவ்வப்போது அறிவுறுத்துகிறது. இதனால் தினமும் மீன்பிடிக்கச் சென்றால்தான் தங்கள் குடும்பத்திற்கு உணவளிக்க முடியும் என்ற நிலையில் இருக்கும் அன்றாடங்காய்ச்சிகளான மீனவர்களின் குடும்பங்கள் வறுமையிலும் பட்டினியிலும் தள்ளப்படுகிறது. பேரிடர் காலங்களில் மீனவர்களின் உயிரையும் உடமைகளையும் காக்கும் நல்நோக்கத்துடன் அரசு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று சொன்னாலும் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் இருக்கும் அந்த நாட்களில் அவர்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமையையும் நிறைவேற்ற வேண்டுமல்லவா? சில மாதங்களில் அடுத்த அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று ஏழு எட்டு முறை அறிவித்து மாதத்தின் பாதிநாட்கள் கரையில் இருக்க வைக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் நாட்களில் அவர்களின் குடும்பங்களின் நிலையையும் அரசு எண்ணிப்பார்க்கவேண்டும்.
எனவே, அடுத்த அறிவிப்பு வரும்வரை மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று கூறி தடைவிதிக்கும் நாட்களைக் கணக்கிட்டு அந்த நாட்களில் மீனவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறும்பனை பெர்லின் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.