கிருஷ்ணகிரி, ஜூலை 29 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பெரியாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் அவருடைய குடும்பத்தாரை தாக்கியும் மிரட்டல் விடுவித்தும் வருகின்ற சமூக விரோதி மீது அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் நடவடிக்கை எடுக்க கோரி சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், காரப்பட்டு அருகே உள்ள பெரியாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பவர் கஞ்சா போதையில் அடிக்கடி அப்பகுதியில் அராஜகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் முருகேசன் (42) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் அவர் இல்லாத நேரத்தில், பூபாலன் மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் வீட்டிற்குள் சென்று முருகேசனின் மனைவியை மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வீட்டிற்கு வந்த முருகேசனையும் அவர்கள் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூபாலன் மீது ஏற்கனவே பாரூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10.07.2026 அன்று முருகேசன் மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தியதாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களை தாக்குதல், ஆபாசமாக பேசுதல், நில அபகரிப்பு, டீசல் திருட்டு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படும் பூபாலன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பத்திரிக்கையாளரை தாக்கிய நபரை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிக்கையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



