நாகர்கோவில், ஜூன் 9 –
கன்னியாகுமரியில் இருந்து காரோடு வரை மொத்தம் உள்ள 54 கி.மீ தொலைவில் ரயில்வே பாலம் மற்றும் தாமிரபரணியின் குறுக்கே பெரிய பாலங்கள் கட்டும் பணிகள் நிறைவு பெற்றாலும், மீதமுள்ள சிறிய பாலங்கள் மற்றும் சாலை அமைக்க மண் கிடைக்காமல் பணிகள் தடைபட்டன. இந்நிலையில் பணிகளை மேற்கொண்ட நிறுவனம் பணிகள் நடைபெறாமல் நஷ்டம் காரணமாக தனது ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இதனால் நான்கு வழிச்சாலைத் திட்டம் பாதியில் நின்றது. பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.1041 கோடியே 30 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பணிகள் தொடங்கின. பாலப் பணிகள், சாலைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோதை கிராமம், புத்தேரி, கணியாகுளம் இடைப்பட்ட பகுதிகளில் குளங்களுக்கு மேல் சிறு, சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. புத்தேரி உள்பட 6 பெரிய குளங்களுக்கு மேல் பெரிய பாலங்கள் அமைகிறது. 2026 க்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. காவல்கிணறு-நாகர்கோவில் நான்குவழிச் சாலையில் திருப்பதிசாரத்தில் டோல் பிளாசா அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இவை ஒருபுறம் இருக்க அந்த டோல்பிளாசாவில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் மற்றொரு டோல்பிளாசா நான்குவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. வில்லுக்குறி அருகேயுள்ள மணக்கரை என்ற பகுதியில் டோல்பிளாசா அமைக்கும் பணிகள் அந்தப் பகுதியில் சாலைப் பணிகள் நடைபெற்ற போதே நடந்து முடிந்துள்ளன. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நான்குவழிச் சாலை விதிமுறைகளை மீறி டோல்பிளாசா அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மொத்தத்தில் 54 கி.மீ தூரமே வருகின்ற சாலையில் 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவது விதிமுறைகளை மீறிய செயல் என்றும், பயன்பாட்டிற்கு வரும் முன்னரே இந்தச் சுங்கச்சாவடியைத் திரும்பப் பெற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.