நாகர்கோவில், அக்டோபர் 31 –
தெற்கு ரயில்வே சார்பில் இன்று (31 ம் தேதி) நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடித்து செயலிழப்பு ஒத்திகை நடைபெற்றது.
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்கக்கூடிய ரயிலில் அனாதையாக இருந்த பேக் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக தகவல்கள் வந்தால் போலீசார் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், வெடிகுண்டுகளை செயல் இழக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான ஒத்திகை இன்று காலை நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடந்தது.
நாகர்கோவில் ரயில்வே போலீசார், நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த குழுக்கள் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தினர். 2 மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டுகள் செயலிழப்பு கருவிகள், வெடிகுண்டுகள் செயலிழப்பு நிபுணர்கள் வந்திருந்தனர்.
தெற்கு ரயில்வே சார்பில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கை பயிற்சி ஒத்திகை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒத்திகை நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத் துறையினர், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருதல் போன்ற ஒத்திகையும் நடந்தது.


