நாகர்கோவில், ஜூலை 13 –
குமரி மாவட்டம் தென்தாமரை குளம் அருகே உள்ள ஈத்தங்காடு நாராயணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன் மகன் சபரிவர்மன் (34). இவர் அந்த பகுதியில் கடை நடத்தி வந்தார். கடந்த 9ம் தேதி மதியம் சுமார் 1.30 மணியளவில் இவரது கடையில் தென்தாமரை குளம் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடையிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் சபரி வர்மன் கைது செய்து அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த நான்கு நாட்களாக அவர் விசாரணை கைதி என்ற நிலையில் இருந்துள்ளார்.
இன்று அதிகாலையில் சபரி வர்மன் மயக்க நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை போலீசார் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனையில் சவரி வர்மன் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சபரி வர்மனை போலீசார் சரமாரியாக தாக்கி உள்ளதாகவும், இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர அவசரமாக சிறையில் அடைத்துள்ளதாகவும், சபரி வர்மனுக்கு உடல்நிலை பாதிப்பு கிடையாது என உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதையடுத்து உறவினர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் வருகை தந்தார். தொடர்ந்து இளைஞர்களும் பெண்களும் போராட்டத்தில் பங்கு பெற்றனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ் பி ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் சபரி வர்மனின் உடலில் காயம் இருப்பதாக புகார் கூறப்பட்டது.
இது குறித்து மாவட்ட எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி, பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், யார் தவறு செய்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.



