நாகர்கோவில், ஜூன் 2 –
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அஸ்நாத் (29). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவ தினம் தனது உறவினர் வீட்டு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு காய்கறிகளை சப்ளை செய்து விட்டு, அதற்கான பணத்தை பெறுவதற்காக தெங்கம்புதூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கூகுள் மேப்பை பயன்படுத்தி செல்லும்போது, வழிமாறி அவர் அரியப்பெருமாள் நல்லூர் பகுதிக்கு சென்று விட்டார்.
அங்கு மது அருந்திக் கொண்டிருந்த கும்பல் ஒன்றிடம் வழி கேட்டபோது அவர்கள் தகராறில் ஈடுபட்டு அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். மேலும் அத்துமீறி அஸ்நாத்தின் பாக்கெட்டில் இருந்த 24 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டவர்கள். பின்னர் அஸ்நாத்தை தாக்கினார்கள். உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடிய அஸ்நாத் அருகில் இருந்த பழைய ஆற்றில் குதித்து சுமார் 4 மணி நேரம் ஆற்று ஓரத்தில் இருந்த செடிக்குள் பதுங்கி இருந்துள்ளார். பின்னர் கரைக்கு வந்தவர் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். காயமடைந்த அஸ்நாத் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரித்த போது புத்தளம் பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் பிரடி (35), பறக்கை பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (31), தெங்கம் புதூரை சேர்ந்த ஆரோக்கியராஜ் (23) உள்ளிட்ட கும்பல் என்று தெரிய வந்தது. தொடர்ந்து போலீஸ் வழக்கு செய்து ஸ்டாலின் மற்றும் ஆரோக்கிய ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டாலின் மீது ஏற்கனவே 14 வழக்குகளும், ஆரோக்கியராஜ் மீது 6 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இருவரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


