நாகர்கோவில், மே 2 –
நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் காட்டுவிளை பகுதியில் இன்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் 2 பேர் வந்தனர். போலீசாரை கண்டதும் பைக்கில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் முன்னுக்கு பின்னாக பேசியதால் பைக்கில் சோதனை செய்தனர். இதில் பைக்கில் 60 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து பிடிபட்ட நபரை நாகர்கோவில் உள்ள மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நாகர்கோவில் பறக்கின்கால் பகுதியைச் சேர்ந்த வினு (29) என்பதும், தப்பியவர் செண்பகராமன் புதூரை சேர்ந்த பாபு ஹுசேன் என்பதும் தெரிய வந்தது.
கைதான வினு வீட்டிலும் சோதனை நடந்தது. அவரது செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள். கேரளாவில் இருந்து கஞ்சா கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.


