நாகர்கோவில், ஜூன் 19 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளின் முக்கியமான கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைக்கப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களை மீண்டும் மாவட்டத்திற்கு பெற்றுத் தந்திட ஆவன செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசின் பரிசீலனையில் உள்ளது எனத் தெரிவித்தார்.
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திட கேட்ட கோரிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வரும் கன்னிப்பூ பருவத்தில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்பட தேவையான இடம் தேடுதல் நடவடிக்கைகள் வேளாண் துறையினர் மூலம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள். விவசாயிகள் தங்கள் பகுதியில் காலியாக உள்ள அரசு கட்டிட விவரங்களை வேளாண் துறை அதிகாரிகளிடம் தெரிவித்திட கேட்டுக்கொண்டார்.
மேலும் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உபகரணங்கள், எடை கருவிகள், பணியாளர்கள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரை கேட்டுக்கொண்டார்கள்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் செயல்படுத்தப்படும் நான்கு வழிச்சாலை பணிகளால் மாவட்டத்தில் 80-க்கும் மேலான கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரிசெய்திட வேண்டிய கோரிக்கைக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக செயற்பொறியாளர், நீர்வளத்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் இணைந்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
ரயில்வே பணிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் சரி செய்திட மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் தொடர்பான கோரிக்கைக்கு நீர்பாசன துறையின் செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் இது தொடர்பான அறிக்கையினை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு அளித்திட அறிவுறுத்தினார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் காலை 07.00 மணி முதல் திறந்து செயல்படவும், உரங்களுக்கான விலைப் பட்டியல் மற்றம் இருப்பு விவரங்கள் குறித்த அறிவிப்பு பதாகைகள் விவசாய பெருமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிபடுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட்டுறவு சங்க இணைப்பதிவாளரை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
தென்னையில் வாடல் நோய் கட்டுப்படுத்திடவும், பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றிட உரிய இழப்பீட்டுடன் அனுமதி வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு தென்னை வாரியத்தின் மூலம் சிறப்பு கருத்தரங்கம் ஒன்றை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடத்திட தோட்டக்கலை துறை துணை இயக்குநரை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். நமது மாவட்டத்தில் சிறப்பு காலநிலை உள்ளதால் குளங்களில் மண் எடுப்பதற்கான அனுமதியை மார்ச் மாதத்தில் அரசிதழில் வெளியிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பொதுவான கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டபின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை மூலம் மரக்கன்றுகள். செடிகள் மற்றும் மார்த்தாண்டம் தேன் ஆகியன விவசாயிகளுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. மே 2026-ம் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் வாசிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
நடைபெற்ற கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.



