நாகர்கோவில், ஜூலை 31 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று 31ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது.
ஜுன் 2026-ம் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் வாசிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வீட்டுத் தோட்டம் குறித்த வெற்றிக்கதை காணொளிக்காட்சி மூலம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
பி.பி சானலில் தானியங்கி மறுகால் சீரமைத்திட எழுந்த கோரிக்கைக்கு, இப்பணிக்கென நிதி வேண்டி கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பு பொறியாளர் வரும் வாரத்தில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் செயற்பொறியாளர் நீர்வளத்துறை தெரிவித்தார். தோட்டிகோடு புதுக்கடை சானல் 4-வது மடை சீரமைப்பு பணியினை இந்த ஆண்டிற்கான நீர்வளத்துறை சீரமைப்பு பணிகள் பட்டியலில் சேரத்து செயல்படுத்தவும், அனந்தனாறு சானலில் நீர் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பாலத்தை விரைந்து அகற்றிடவும் மாவட்ட ஆட்சியர் செயற்பொறியாளர் நீர்வளத்துறையை கேட்டுக்கொண்டார்.
நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் தேவைக்காக உலக்கை அருவி திட்டத்தை செயல்படுத்திட விவசாயி செண்பகசேகரபிள்ளை வைத்த கோரிக்கைக்கு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நான்குவழிச்சாலை மற்றும் ரயில்வே திட்ட பணிகளால் நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் குறித்த முன்னேற்ற அறிக்கை சமர்ப்பித்திட மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். சுசீந்திரம் மணக்குடியான் கால்வாய் தூர்வார வைத்த கோரிக்கைக்கு, வி.வி கிராமத் திட்டத்தின்கீழ் இதனை செயல்படுத்திட திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 99 பணிகளுக்கு பணி மேற்கொள்ள 4.44 கோடி நிதி பெறப்பட்டு 90 பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் மீதமுள்ள 9 பணிகளும் விரைந்து முடிக்கப்படும் எனவும் செயற்பொறியாளர் நீர்வளத்துறை தெரிவித்தார்.
புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரிய கோரிக்கைக்கு, கூடுதலாக 8 இடங்களில் நேரடி நெல் கொள்முதால் நிலையங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை மூலம் மரக்கன்றுகள், செடிகள், விவசாயிகளுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலுமணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ர.மோனிகா, வேளாண்மை இணை இயக்குநர் எம்.ஆர்.வாணி, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.



