நாகர்கோவில், மார்ச். 24-
சட்டமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் இன்று சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரி ஒன்று நாகர்கோவில் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் ஏராளமான மரப்பெட்டி, இரும்பு பெட்டிகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூபாய் 20 நாணயங்கள் பைகளில் அடைக்கப்பட்டு வைத்திருந்தனர். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்ற கோணத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது அந்த வாகனம் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கரன்சி பிரிவுக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இதை அடுத்து வங்கிகளுக்கு இடையேயான பணப்பரிமாற்றம் மற்றும் வங்கி தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வங்கி அதிகாரிகள் நேரில் ஆஜராகி ரிசர்வ் வங்கியின் முறையான அனுமதி கடிதம் மற்றும் பண பரிமாற்ற ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் பணம் அனைத்தும் பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


