நாகர்கோவில், ஜூலை 13 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில் மாவட்ட போலீஸ் எஸ் பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். போக்குவரத்து விதிமுறை மீறுபவர்களுக்கு அபராதம் மதிப்பு, வழக்குப்பதிவு என ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் காவல்துறை சார்பில் பள்ளி கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு குழுக்கள், நோ ஹெல்மெட் – நோ என்ட்ரி, விபத்தில்லா குமரி என்ற தலைப்புகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் அடுத்த கட்டமாக வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி விளக்குகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், ஒளிரும் தன்மையை கட்டுப்படுத்த வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றனர். நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வை பாதிக்கப்படாமல் விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
மேலும், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அசோக், காவலர் ஐயப்பன் உடன் தன்னார்வலர்களான ராமசாமி பிள்ளை, ஜே.கே. ராஜேஷ் மற்றும் லட்சுமி ஆகியோருடன் இணைந்து சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி, முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டி, இரவு நேரங்களில் அதிக வெளிச்சம் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வின் போது, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கவும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.



