சூலூர், ஜூன் 18 –
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் அரசு தோட்டக்கலைப் பண்ணை, கண்ணம்பாளையத்தில் பாரதிய பிரகிருதிக் கிரிஸி பதாதி திட்டத்தின் கீழ் ஒருநாள் மாநில அளவிலான பயிலரங்கு நடைபெற்றது. இதில் ஈரோடு, உதகை,கோவை, நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருப்பூர் மாவட்ட இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் அனைத்து மாவட்ட விவசாயிகளும் தங்கள் அனுபவம் மற்றும் வழிமுறைகள் பற்றி கலந்துரையாடினர். முன்னதாக சூலூர் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குனர், சித்ரா பானு வரவேற்புரை ஆற்றினார். அன்னூர் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குனர் கோமதி திட்டத்தைப் பற்றிய விரிவான விளக்க உரை ஆற்றினார். தமிழ்நாடு அங்கீகார சான்றளிப்பு துறையில் இருந்து மகேஸ்வரன் மற்றும் செல்லம்மாள் ஆகியோர் எவ்வாறு அங்கீகார சான்றழிப்பு பெறுவது என்பது பற்றிய வழிமுறைகளை விளக்கி கூறினார்கள். காரமடை வேளாண் அறிவியல் மையம் சகாதேவன் இயற்கை வேளாண் குறித்த தொழில்நுட்ப உரை ஆற்றினார். 40 ஆண்டு காலம் இயற்கை விவசாயம் செய்து வரும் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐஸ்வர்யம் மயில்சாமி, இருகூர் அத்தப்ப கவுண்டன்புதூர் அகரம் இயற்கை வேளாண் பண்ணை தங்கவேல், செஞ்சோலை இயற்கை வேளாண் பண்ணை செந்தில்குமரன், ஆர்கானிக் மாரிமுத்து மெட்டுவாவி, பொன்முத்து குண்டடம் பகுதி விஜயன், காப்பியம் ஆர்கானிக் பார்ம் மாதம்பட்டி, கிரீன் லைப் பயோடெக் சோமனூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து முன்னோடி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் தொழில் நுட்ப முறைகளையும் இந்த பயிலரங்கத்தில் பகிர்ந்து கொண்டனர். விழா நிறைவில் தோட்டக்கலை அலுவலர் கிருத்திகா நன்றியுரை ஆற்றினார்.