தேனி, செப்.01.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுடனான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு. இரா. வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயின்று 100% தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், 2026-27 கல்வியாண்டின் முதல் பருவத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், அதற்கான காரணங்களை கண்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் இருந்தால், அவர்களையும் பெற்றோர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கி மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தேனி மாவட்டத்தை 100% தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



