திருவட்டாறு, ஜூன் 18 –
இந்தியாவின் கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் சார்பில் 6-வது தேசிய வில்வித்தை சாம்பியன் – 2026 போட்டிகள் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அமைந்துள்ள புனித கில்டா ஆண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த தேசிய அளவிலான போட்டியில் திருவட்டாறு அருகே பிலாங்காலை புனித ஜோசப் உயர்நிலை பள்ளி மாணவர்கள் அர்சல் ஜோ, அஸ்மித் , அன்சிகா ஜான், நிகில் ஜான் ஆகியோர் பங்கேற்று முதல் பரிசுகளையும், ஒரு மாணவர் மூன்றாம் பரிசையும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
இச்சாதனையைப் பாராட்டும் வகையில் பள்ளியில் சிறப்பு பாராட்டு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தாளாளர் அருட்பணியாளர் ரென்னி களத்தில், தலைமை ஆசிரியர் அருட் பணியாளர் லூக்கா, ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
மேலும், மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய பயிற்சியாளர் ஜனார்த்தனன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திபோர்சியஸ் ஆகியோர் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் இச்சாதனைக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.



