மார்த்தாண்டம், மே 18 –
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ எம் பாரதி தலைமையில் ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் கிள்ளியூர் வட்டார பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக தேங்காப்பட்டணம் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த கேரளா பதிவெண் சொகுசு காரை தடுத்து நிறுத்தினர். அப்போது கார் ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.
அதிகாரிகள் காரை சோதனையிட்ட போது, அதில் சுமார் 400 லிட்டர் மீனவர்களுக்கு மானியவிலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை கேரளாவுக்கு கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. பின்னர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட மண்ணெண்ணெய் தூத்தூர் மீனவர் கூட்டுறவு சங்க கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. வாகனம் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.



