தென்காசி, ஆகஸ்ட் 14 –
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தென்காசி மாவட்டத்தில் 15 கோடி ரூபாய் செலவில் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கத்தில் 400 மீட்டர் தடகள மைதானம், கால்பந்து மைதானம், கபடி உள்விளையாட்டு அரங்கம், பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைந்துள்ளது. இந்த புதிய மாவட்ட விளையாட்டு அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சியில் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற ராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.



