தென்காசி, ஜூன் 3 –
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராக ரஞ்ஜீத் சிங் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (03.06.2026) பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில்: அனைவருக்கும் வணக்கம் நான் தென்காசி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராக பதவியேற்றுள்ளேன். நான் 2016-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவை சேர்ந்தவன். இதற்கு முன்னதாக தேனி மாவட்ட ஆட்சியராக ஒரு வருடத்திற்கும் மேலாகப் பணியாற்றியுள்ளேன். ஆகவே எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் முழு அர்ப்பணிப்புடன் (dedication) மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் தீர்வு காணும் வகையில் பணியாற்றுவேன். அதேபோல் முன்னாள் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களின் நல்ல முன்னெடுப்புகளை நான் தொடர்ந்து முன்னெடுத்து செல்வேன்.
நிர்வாகக் கொள்கையில் மக்களுக்கான சேவை மற்றும் உடனடி பதிலளிக்கக்கூடிய (People centric and responsive governance) ஒரு நிர்வாகத்தை வழங்க முயற்சிப்பேன். பெரும்பாலான பிரச்சனைகள் சரியான நேரத்தில் பதில் கிடைக்காததாலேயே மீண்டும் மீண்டும் கோரிக்கைகள் வருகின்றன. ஆகவே பொதுமக்கள் வழங்குகின்ற கோரிக்கை மனுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் (run time) பணிகளை தீர்வு காண்பது மூலம் மக்கள் ஓரளவுக்குத் திருப்தியடைவார்கள்.
அணுகுமுறை எப்பொழுதும் மக்களை எளிதில் சந்திக்கும் வகையில் (approachable) இருக்கும். நான் அடிக்கடி நேரடியாகக் கள ஆய்வுக்குச் செல்வேன். மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் தொலைபேசியிலோ அல்லது நேரிலோ பார்க்கலாம் . அலுவலர்களுக்கும் உரிய சுதந்திரம் அளிக்கப்படும் அதே வேளையில் மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதில் அவர்களுக்குப் பொறுப்புணர்வும் (responsibility) இருக்க வேண்டும்.
ஏற்கனவே இருந்த ஆட்சியரிடம் சில விவரங்களைக் கேட்டுள்ளேன். மேலும் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு எங்குப் பணிகள் நிலுவையில் உள்ளதோ (pendency) அதனைக் கண்டறிவதன் மூலம் முழுமையான தீர்வு கிடைக்கும்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும் (Agrarian district). நான் ஏற்கனவே தேனி மாவட்டத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்துவேன். விவசாயிகளின் குறைகளைத் தீர்க்கவும் அவர்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்களுக்கு பதில் கிடைப்பதை உறுதி செய்யவும் ஒரு சிறப்பான முறை (system) அமைக்கப்படும். தென்காசி மாவட்ட விவசாயிகளுக்காகவும்விவசாய முன்னேற்றத்திற்காகவும் முழுமையாக பணியாற்றுவேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உடனிருந்தார்.



