தென்காசி, ஜூன் 25 –
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் லன்ஸ் நாயக். மீனாட்சி சுந்தரம். இவர் இந்திய ராணுவத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் 34வது ராஷ்ட்ரிய ரைபில்ஸ் பிரிவில் பணியாற்றி வரும் நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையின் போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனாட்சிசுந்தரம் முகம் மற்றும் தோள்பட்டையில் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த நிலையிலும் எதிர்த்து போராடிய மீனாட்சி சுந்தரத்திற்கு துணிச்சலாக போராடிய அவர் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் வீரத்திற்கான 2வது உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருதினை இந்திய அரசு அவருக்கு வழங்கி பாராட்டியுள்ளது. 2026ஆம் ஆண்டு இவ்விருதினை பெற்ற 7 பேரில் இவரும் ஒருவர்.
இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் சேர்மன் புதிய பாஸ்கர் தலைமை வகித்தார். தாளாளர் கல்யாணி புதிய பாஸ்கர் முன்னிலை வகித்தார். முதல்வர் மணிகண்டன் வரவேற்றார். விழாவில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் பேசியதாவது: இளம் வயதுடைய இளைஞர்கள் ரத்தம் சூடாக இருக்கும் போது ஏதாவது சாதித்திட வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என வயதையும் நேரத்தையும் வீணடிக்க கூடாது. நமது நாடு அமைதியாக உள்ளது அதை அப்படியே இருக்க வேண்டும் ஏதாவது கொள்கைகளைக் கொண்ட தீவிரவாத இயக்கமோ, அமைப்போ இந்தியாவை கஷ்டப்படுத்தினால் அவர்களுக்கு என்ன மொழி புரிகிறதோ அந்த மொழியில் கற்றுக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய மாநில அரசுகளும் தயாராக உள்ளது.
நமது நாடு ஒரு ஜனநாயக நாடு. நாம் மற்ற நாடுகளில் போய் எந்த ஒரு பதவிக்கும் வர முடியாத நிலையில் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கும் வர முடியும். இந்திய குடியரசுத் தலைவர் பழங்குடியின மக்களை சேர்ந்தவர் தேநீர் கடையில் வேலை பார்த்தவர் இன்று நமது பாரத பிரதமர். நடிப்புத் திறனை கொண்டவர் இன்று நமது தமிழகத்தின் முதல்வர். இந்த சுதந்திரம் இந்தியாவில் மட்டுமே உள்ளது. இந்த வாய்ப்பும் சுதந்திரமும் மற்ற நாடுகளில் கிடையாது. நம் நாடு அமைதியாக உள்ளது அமைதியாக இருக்கவும் நாட்டிற்காக போராட வேண்டும். ராணுவம், காவல்துறை, அரசியல் என எந்தத் துறையில் சென்றாலும் நேர்மையாக இருக்க வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும் திறமை உள்ளவர்கள் வெளியில் வராததற்கு காரணம் இதுவே.
எனவே இளைஞர்கள் வயதை வீணடிக்காமல் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து செயல்பட வேண்டும் என்று பேசினார். முன்னதாக இக்கல்லூரியில் பயின்ற இரண்டு மாணவர்கள் தற்போது ராணுவத்தில் பணி புரிந்து வருகின்றனர் அவர்களையும் பாராட்டி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.



