தென்காசி மாவட்டம் தென்காசி அரசு மருத்துவமனையில் வெப்ப பக்கவாதத்திற்கான தனி வார்டு திறக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. 100 டிகிரி செல்சியசை கடந்து வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் வெப்ப பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். வெப்ப அலையில் சிக்கி தவிக்கும் பொது மக்களை காப்பாற்றும் பொருட்டு ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் வெப்ப பக்கவாதத்திற்கான தனி வார்டு திறக்கப்பட்டுளள்து. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில், சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தலா 4 படுக்கைகள் வீதமும், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையான தென்காசி மருத்துவமனையில் 8 படுக்கைகள் கொண்ட வார்டும் திறக்கப்பட்டது. இதனை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா கூறியதாவது :
தமிழகத்தில் தற்போது 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் தாண்டி பதிவாகும் நிலையில் சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்கள் வெப்ப அலையால் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இவர்களுக்கு உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை கடக்கும் பொழுது வெப்ப பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மக்கள் நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரி, தர்பூசணி, இயற்கையான உணவு பொருட்களால் தயாரிக்கப்படும் பழச்சாறு ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். மேலும் பர்கர் போன்ற காரத்தன்மை அதிகம் உள்ள துரித உணவுப் பொருட்களை கைவிட வேண்டும். வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்ந்து நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.



